

பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக பா.ஜனதா அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. இந்த அரசுக்கு வெட்கம் இல்லையா. மண்டியா மக்களவை தொகுதியில் குமாரசாமியின் மகனை சுமலதா எம்.பி. தோற்கடித்தார். அதனால் அவருக்கு எதிராக குமாரசாமி அரசியல் செய்கிறார். கே.ஆர்.எஸ். அணையின் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் சட்டவிரோதமாக கல் குவாரி தொழில் நடைபெறுவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சுமலதா கூறினார்.
ஆனால் கனிமத்துறை அதிகாரிகள் இதுவரை அந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. இந்த விஷயத்தில் அரசு மவுனமாக உள்ளது. இதை பார்க்கும்போது இந்த சட்டவிரோத கல் குவாரி தொழிலில் அரசும் கைகோர்த்துள்ளது தெரிகிறது. பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் பாதாமி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
காங்கிரசில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாங்கள் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் உள்ளது. அதை வெளியிட்டால் சமூகநீதியை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அரசு மவுனம் காக்கிறது என்று சித்தராமையா கூறினார்.