கன்னட நடிகர்கள் உள்பட 8 பேர் வீடுகளில் வருமானவரி சோதனை: ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலம் - ரூ.11 கோடி மதிப்பு நகை-பணம் பறிமுதல்

கன்னட நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னட நடிகர்கள் உள்பட 8 பேர் வீடுகளில் வருமானவரி சோதனை: ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலம் - ரூ.11 கோடி மதிப்பு நகை-பணம் பறிமுதல்
Published on

பெங்களூரு,

கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. சிவராஜ் குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சோதனையின்போது வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3-ந் தேதி சோதனை நடத்தினர். திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வரு மானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத 25.3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.85 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.11 கோடி. மேலும் ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com