

அமராவதி,
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி உள்ளது. இந்த நிலையில் வல்லுனர் குழு ஒன்று ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்தை பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 17-ந் தேதி கூறும்போது, தற்போதைய தலைநகரான அமராவதி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அது சட்டசபையுடன் கூடிய தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என குறிப்பிட்டார்.
ஆனால் அமராவதியை தலைநகராக உருவாக்குகிற திட்டத்துக்காக நிலங்களை கொடுத்த விவசாயிகள், 3 தலைநகர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமராவதியில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்றின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அந்த அறிக்கை வந்தபின்னர் மந்திரிசபை கூடி முடிவு எடுக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.