

காசர்கோடு,
கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் பூச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ரீனா. இவர்களது மூத்த மகள் அனுஸ்ரீ (வயது 25). இவர் கர்நாடக மாநிலத்தில் ஹூன்சூர் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இதற்கிடையே அனுஸ்ரீக்கும், கண்ணூர் மாவட்டம் இரிட்டி அருகே அம்பலத்தட்டு பகுதியை சேர்ந்த சுதாகரன் என்பவரது மகன் அமல் (27) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டது. அமல், எர்ணாகுளத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
கடந்த வாரம் அமல், அனுஸ்ரீ ஆகிய 2 பேரும் கண்ணூரில் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் வேலைக்கு சென்றதாக தெரிகிறது. கடந்த 11-ந் தேதி வங்கியில் அனுஸ்ரீ பணிபுரிந்ததோடு, தனது சகோதரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் இரவில் ஹூன்சூரில் உள்ள விடுதி அறைக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அனுஸ்ரீயை குடும்பத்தினர் செல்போனில் பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி விடுதிக்கு சென்று பார்க்குமாறு கூறினர். அவர்கள் விடுதியில் சென்று பார்த்த போது. அங்கு அனுஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதை அறிந்த அமல், வருங்கால மனைவி இறந்து விட்டதால் மனமுடைந்தார்.
அவரது பிரிவை தாங்க முடியாமல் அவர் எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த எர்ணாகுளம் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனுஸ்ரீ தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து இருமாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயமான இளம்பெண், வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.