இங்கிலாந்து இடைத்தரகரின் முன்னாள் மனைவியின் ரூ.5¾ கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

ஹெலிகாப்டர் பேர ஊழலில், இங்கிலாந்து இடைத்தரகரின் முன்னாள் மனைவியின் ரூ.5¾ கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கிலாந்து இடைத்தரகரின் முன்னாள் மனைவியின் ரூ.5¾ கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
Published on

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், ஹெலிகாப்டர் பேர ஊழல் மூலம் கிடைத்த தொகையில் ரூ.5.83 கோடியை கிறிஸ்டியன் மைக்கேல், தனது முன்னாள் மனைவி வலேரி மைக்கேலின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்திருப்பதும், பின்னர் அந்த தொகை மூலம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சொத்து வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வலேரிக்கு சொந்தமாக பாரீசில் இருக்கும் ரூ.5.83 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com