

புதுடெல்லி,
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் டெல்லியில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கொடுத்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கை வருமாறு:-
முக்கியமான பொதுத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்பது வழக்கம். கடந்தகாலங்களில் இதுபோன்ற சில கருத்துகேட்பு கூட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுயநலத்துக்காக சிலரின் குறுக்கீட்டால் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.
எனவே, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி1 திட்டங்களுக்காக கருத்துகேட்பு நடத்தாமலேயே மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர, மேலும் 12 கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.