

புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் வெளியாகும் நாளன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை திட்டமிட்டபடி டிசம்பர் 1ந்தேதி வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேச முதல்மந்திரிகளும் எதிர்த்துள்ளனர். பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பத்மாவதி படம் குறித்து தணிக்கை குழு இறுதி முடிவு எடுக்காத நிலையில் இத்தகைய வழக்கு தேவையற்றது என சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.
படத்தை பார்க்கும் முன்னரே பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த கருத்தையும் கூற கூடாது என படத்தை எதிர்ப்பவர்களை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது.
இந்நிலையில் பத்மாவதி விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்த சல்மான் கான் எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறிஉள்ளார். மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது சரியானது கிடையாது, படத்தை பார்க்காமல் முடிவுக்கு வருவதும் சரியானது கிடையாது என கூறிஉள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய சல்மான் கான், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கினாலும், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கினாலும் அதற்கு எல்லோரும் மதிப்பளிக்க வேண்டும், என கூறிஉள்ளார்.