அ.தி.மு.க. குறித்த எனது நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்: அண்ணாமலை

பா.ஜனதாவை விட்டு தான் விலகப்போவது இல்லை என்றும், தலைவர் போட்டியில் தான் இல்லை என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
அ.தி.மு.க. குறித்த எனது நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்: அண்ணாமலை
Published on

உடுப்பி,

 தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதலில் பா.ஜனதா கட்சியின் தொண்டன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அதை நான் நிறைவேற்றுவேன். நாங்கள் அனைவரும் ஒரு தேசிய கட்சியின் உறுப்பினர்கள். வேலை என்பது எனது கடமை, எனக்கு ஒதுக்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் நான் செய்வேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். கூட்டணி குறித்து அவர் தெளிவாகப் பேசியுள்ளார். அ.தி.மு.க. குறித்த எனது நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பொதுவான குறிக்கோள். அதுதான் எங்கள் கட்சியின் முதன்மையான நோக்கம். அ.தி.மு.க. ஒரு பெரிய திராவிடக் கட்சி. அமித்ஷாவுடனான சந்திப்பு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. ஒப்புக்கொண்டிருப்பதை தெளிவாக காட்டுகிறது. நான் எங்கு இருக்க வேண்டும், எந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒரு கட்சித் தொண்டனாக நான் ஏற்றுக்கொள்வேன். தமிழ்நாட்டில் மாற்றம் வரப்போகிறது, பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

தமிழ்நாடு அரசியல் என்பது ஒரு நீண்டகால பயணம். நாங்கள் பொறுமையாக காத்திருப்போம். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்போம். நாங்கள்(பா.ஜனதா) ஆட்சிக்கு வருவோம். அரசியலில் அதிகாரத்தை விட பொறுமை முக்கியமானது.கட்சியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது நடந்தாலும், நான் போட்டியில் இருக்க மாட்டேன்" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com