தெலங்கானாவில் 6 வயது மகனை சரமாரியாக தாக்கிய தாய் - வைரல் வீடியோ

குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராமா (பெண்). இவரது கணவர்ஆஞ்சநேயுலு. அவர் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் ராமா தனது மகனை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ராமா தான் பெற்ற பிள்ளை என்று கூட பாராமல் மகனை வீட்டில் வெளிப்புறத்தில் வைத்து கீழே தள்ளி தனது காலால் உதைத்து தள்ளியும், கையால் சரமாரியாகவும் தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுது துடித்தது.
குழந்தையின் அழுகையை சற்றும் கண்டுகொள்ளாத ராமா தொடர்ந்து தாக்கினார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாயின் இந்த கொடூர செயலை அருகில் வசிக்கும் ஒருவர் மாடியில் இருந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து, விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை தாக்கிய தாயை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். ராமா தனது மகனை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனை பதிவு செய்து கொண்ட போலீசார் தாயிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






