3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் மரணம்

சந்தவுலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற சிங், பெண் நோயாளி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.
3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் மரணம்
Published on

லக்னோ

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவர் குர்பிரீத் சிங் (வயது 45). ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரராவார். இந்நிலையில், இவர் 26 மணிநேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்றுள்ளார். எனினும், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இரவில், கொல்கத்தாவில் இருந்து ஜம்மு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் குர்பிரீத் சிங் பயணித்து உள்ளார். அப்போது பீகாரை சேர்ந்த தினேஷ் ஷா என்பவர் குடும்பத்துடன் அதில் பயணித்து உள்ளார். நள்ளிரவில் அவரை குர்பிரீத் சிங் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் பலியானார்.

ரெயில் மெதுவாக சென்றபோதும் வாரணாசி ரெயில் நிலையத்தில் குர்பிரீத் இறங்கி தப்பி விட்டார். அன்றைய தினம் காலையில் சகல்திஹா ரெயில் நிலையம் அருகே பயணிகள் ரெயிலில், மனாக்ரு என்பவரை குர்பிரீத் சிங் சுட்டு கொன்று விட்டு, அவருடைய உடலை தண்டவாளத்தில் போட்டு விட்டு தப்பினார்.

இதன்பின்னர் நேற்று காலை, சந்தவுலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற சிங், பெண் நோயாளி ஒருவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலியானார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் அவரை தப்பியோட விடாமல் பிடித்து, கடுமையாக தாக்கினர்.

பின்னர் அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் பற்றி நடித்து காட்ட நேற்றிரவு அவரை அழைத்து கொண்டு போலீசார் சென்றனர். அப்போது, போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்த குர்பிரீத் சிங், போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்.

இதற்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். என்கவுன்ட்டரில் 3 போலீசார் காயமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com