

நகரி,
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி, வயது 25. பெங்களூருவில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடுமையான பணிச்சுமையால் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தாயாருடன் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த பெண் என்ஜினீயர், தனது தாயாரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் தனது உடைகளை திடீரென களைந்து விட்டு தெருக்களில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த தேஜஸ்வினி, கையில் புடவை ஒன்றையும் வைத்திருந்தார். தொடர்ந்து, அருகே உள்ள பீரம்மா கோவிலுக்குள் நிர்வாணமாக நுழைந்த அவர், அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு, அருகே இருந்த கோவில் குளத்தில் குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இந்த காட்சி கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. மறுநாள் காலை, அறை கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு தேஜஸ்வினியின் தாய் அலறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் வெளியே வந்தார். மகளை காணவில்லை என தேடியபோது, அவரது உடல் கோவில் குளத்தில் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதே சமயம், அவர் எடுத்துச் சென்ற அம்மன் சிலையை காணவில்லை. வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுவதால் குளத்தில் சிலையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனது மகளுக்கு அடிக்கடி பயங்கர கனவுகள் வந்ததாகவும், சமீபகாலமாக அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் பெண் என்ஜினீயரின் தாயார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.