

புதுடெல்லி,
தமிழகம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 3 மாநிலங்களில் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை மத்திய நீர் ஆணையம் விடுத்து உள்ளது.
இதன்படி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவரம்பு பகுதியில் கோடையாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. இதில், அபாய அளவான 12 மீட்டர் என்பதற்கும் கூடுதலாக 1.85 மீட்டர் உயர்ந்து 13.85 மீட்டர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இது கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி 14.58 மீட்டர் என்ற அதிக அபாய அளவை விட 0.73 மீட்டர் குறைவு என தெரிவித்து உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இதேபோன்று, கேரளாவில் மணிமாலா மற்றும் அச்சன்கோவில் ஆறுகளிலும் வெள்ளநீர் அபாய அளவை கடந்து செல்கிறது. இதில், மணிமாலா ஆற்றில் 6.0 மீட்டர் என்ற அபாய அளவை காட்டிலும் 0.52 மீட்டர் கூடுதலாக 6.52 மீட்டர் என்ற அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இது, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 16ந்தேதி 9.64 மீட்டர் என்ற அதிக அபாய அளவை விட 3.12 மீட்டர் குறைவாகும். அச்சன்கோவில் ஆற்றிலும் 10 மீட்டர் என்ற அபாய அளவை காட்டிலும் 1.45 மீட்டர் கூடுதலாக 11.45 மீட்டர் என்ற அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று நெய்யாறு மற்றும் கருவண்ணூர் ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஒடிசாவின் கெந்துஜார் மாவட்டத்தில் சுவாம்பாட்னா மற்றும் அனந்தபூர் பகுதியில் பாயக்கூடிய பைதாராணி ஆற்றிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.