

பாட்னா,
பீகார் மாநிலம் ஜமால்பூர் பகுதியில், இந்திய அரசு என பெயர் பலகை பொருத்திய வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த வாகனத்தில் இருந்த மணீஷ் குப்தா என்ற நபர், தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டதோடு, ‘நான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜெண்ட்’ என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். மணீஷ் குப்தாவின் வீட்டின் வெளியே இந்திய அரசு என்ற பலகை பொருத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், மணீஷ் குப்தா ஒரு போலியான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவரது வீட்டில் இருந்து டெஸ்லா உள்ளிட்ட சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் 23 கிரெடிட் கார்டுகள், 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், 2 கலைமான் கொம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் மணீஷ் குப்தா சட்டவிரோதமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.