

பொய் வழக்குகள்
பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நாராயண் ரானேவை கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்-மந்திரியை அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் கைது செய்தனர். தற்போது அவரது மகனும், எம்.எல்.ஏ.வுமான நிதேஷ் ரானே மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் நிதேஷ் ரானேவுக்கு கோர்ட்டில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மராட்டியத்தில் பா.ஜனதா தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக மத்திய ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே குற்றம்சாட்டி உள்ளார்.
மந்திரியை காணவில்லை
இதுகுறித்து அவர் கூறுகையில், " பழிவாங்கும் நோக்குடன் பா.ஜனதா தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. எனினும் கோர்ட்டின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில அரசிடம் பேச விரும்பினால், யாரிடம் பேசுவது என தெரியவில்லை.. முதல்-மந்திரி உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். உள்துறை மந்திரியை காணவில்லை. மூத்த போலீஸ் அதிகாரிகளும் மாயமாகி உள்ளனர்" என்றார்.