

லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை சிறுத்தை ஒன்று கழுத்தைக் கடித்து, கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மொராடாபாத் வனப்பகுதிக்கு உட்பட்ட தாகூர் துவாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெக்ராஜ் (வயது 35). அவர் மாற்றுத்திறனாளி விவசாயி. ஜெக்ராஜ் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு தனது வீட்டின் வராண்டாவில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த ஜெக்ராஜின் கழுத்தைக் கவ்விப் பிடித்து, அருகிலிருந்த அடர்ந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஜெக்ராஜ் கட்டிலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் தேடினர். அப்போது, கரும்பு தோட்டத்திற்குள் அவர் சிறுத்தையால் கொடூரமாக கடித்து கொல்லப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
அப்பகுதியில் கடந்த 25 நாட்களில் மட்டும் சிறுத்தை தாக்குதலுக்குப் பலியான 4-வது நபர் இந்த விவசாயி. 3 நாட்களுக்கு முன்புதான் அதே கிராமத்தில் வயலில் வேலை செய்த ஒரு பெண்ணும் சிறுத்தையால் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, விவசாயியின் உடலை எடுக்கவிடாமல் இன்று காலை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு, விவசாயியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நரமாமிசம் பழகிய அந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க கரும்பு தோட்டத்தைச் சுற்றி 15-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் கிராம மக்கள் கடும் பீதியில் உள்ளனர். "அப்பகுதி மக்கள் யாரும் நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்க வேண்டாம்; கரும்புத் தோட்டங்களுக்கு தனியாகவும், பாதுகாப்பு இல்லாமலும் செல்ல வேண்டாம்" என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.