

புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகளுடன், மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் வருகிற நாட்களில் விவசாயிகள் பல்வேறு புதிய போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இதில் முக்கியமாக தங்கள் போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்வதையொட்டி வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதைப்போல பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரெயில்வே தனியார் மயம் போன்றவற்றை கண்டித்து வருகிற 15-ந் தேதி வர்த்தக சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஹோலிகா தகனத்தை அனுசரிக்கும் வகையில் வருகிற 28-ந் தேதி விவசாய சட்டங்களின் நகல் எரிப்பை மேற்கொள்ளவும் விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.