

பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக முற்றுகை போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, விவசாய பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை.
சாலை மறியல்
எனவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த 6-ந்தேதி 3 மணி நேரம் நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடுத்தகட்டமாக விவசாயிகள் நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
4 மணி நேரம் போராட்டம்
அதன்படி வருகிற 18-ந்தேதி பகல் 12 மணி முதல் 4 மணி வரை (4 மணி நேரம்) நாடு முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாக விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நேற்று அறிவித்தது.
இதைப்போல ராஜஸ்தானில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்க விடமாட்டோம் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஒன்றில் தெரிவித்து உள்ளது.
முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.