செல்போன் பார்ப்பதை கண்டித்த தந்தை.. 13 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், செல்போன் பார்த்து கொண்டிருந்தான். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவனது தந்தை அதனை கண்டித்தார்.
கார்வார்,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் மங்களவாடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். வியாபாரி. இவரது மகன் ஓம் கதம் (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓம் கதம் படித்து வந்தான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஓம் கதம் செல்போனை அதிகளவு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓம் கதமை மனோகர் கண்டித்ததாக தெரிகிறது.
ஆனால் அதனை ஓம் கதம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஓம் கதம், செல்போன் பார்த்து கொண்டிருந்தான். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த மனோகர், செல்போனை பறித்ததுடன், ஓம் கதமை கண்டித்தார்.
இதனால் ஓம் கதம் மனம் உடைந்து போனான். வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிய ஓம் கதம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஓம் கதம் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்து தந்தை மனோகர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து ஹலியால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






