

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் வசித்து வருபவர் கிரண் ஹொன்னண்ணவர். டாக்டரான இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர் கண் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு நிகித் (வயது 10) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் உறவினர்கள் பிரியாவை தொடர்பு கொண்டனர். அப்போது கணவர் கிரண், ஓய்வெடுப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு பிரியாவும், கிரணும் அழைப்பை எடுக்காததால் பதறிபோன உறவினர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிரண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மற்றொரு அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டு பிரியா செல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் மகன் நிகித் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து தார்வார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் சசிகுமார், போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார் படுகாயம் அடைந்த நிகித்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் பிரியாவை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காமல், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரியா தனது கணவர் கிரணை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு மகன் நிகித்தையும் கத்தியால் குத்தியது தெரியவந்தது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்றாமல் அவனக்கு அருகே படுத்து செல்போனை அவர் மும்முரமாக பார்த்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்தனர்.
அவர் எதற்காக கணவரை கொன்றுவிட்டு மகனை கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டி ருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பிரியாவிடம் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.