

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஈஷா (வயது 37). மராட்டியத்தைச் சேர்ந்த இவர் பெண் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 8 வயதும், மற்றொரு குழந்தைக்கு 6 மாதமும் ஆகிறது.
நேற்று முன்தினம் ஈஷாவின் கணவரும், மூத்த மகளும் கடைக்கு சென்றுவிட்டனர். அப்போது தனது குழந்தையை தூக்கிக்கொண்டு 6-வது மாடிக்கு சென்ற ஈஷா திடீரென அங்கிருந்து குழந்தையுடன் கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த ஈஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர்தப்பியது. அதாவது மேலே இருந்து குதித்தபோது குழந்தை அணிந்திருந்த ஆடை ஒரு இரும்பு கம்பியில் சிக்கியது. இதனால் குழந்தை கீழே விழவில்லை. கம்பியில் சிக்கிய குழந்தையை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2-வது குழந்தை பிறந்ததில் இருந்து ஈஷா மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.