வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

மடிகேரியில் வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வனத்துறை பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

குடகு:-

வனத்துறை பெண் அதிகாரி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஷ்மி (வயது 27). குடகு மாவட்டம் மடிகேரி வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன பாதுகாவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ரஷ்மி பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

அவர் மடிகேரி வனத்துறை குடியிருப்பில் வசித்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ரஷ்மி தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால் நேற்று காலை ரஷ்மியின் வீட்டின் கதவை வெகுநேரமாகியும் திறக்கவில்லை.

தற்கொலை

இதனால் அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் கதவை தட்டி திறக்கும்படி கூறினர். ஆனால் வீட்டின் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மடிகேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரஷ்மி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

காரணம் என்ன?

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

குடும்ப சூழ்நிலையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது பணி சுமையின் காரணமாக தற்கொலை முடிவை அவர் தேடிக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில் ரஷ்மி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்திருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் சோதனை செய்தனர். ஆனால் எந்த கடிதமும் கிடைக்கவில்லை.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மடிகேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வனத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மடிகேரியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com