தாவூத் இப்ராஹிமுடன் சரத் பவாருக்கு தொடர்பு என கூறிய மத்திய மந்திரி மகன் மீது வழக்குப்பதிவு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் நிழலுலக தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய மத்திய மந்திரி நாராயண் ரானேவின் மகன்களுக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாவூத் இப்ராஹிமுடன் சரத் பவாருக்கு தொடர்பு என கூறிய மத்திய மந்திரி மகன் மீது வழக்குப்பதிவு
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் நிழலுலக தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய மத்திய மந்திரி நாராயண் ரானேவின் மகன்களுக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சரத் பவாருக்கும் நிழலுலக தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உள்ளதா..? என கேட்ட மத்திய மந்திரி நாராயண் ரானேவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மராட்டிய மாநில மந்திரியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிமின் பணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நவாப் மாலிக்கை மார்ச் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நவாப் மாலிக் விவகாரத்தில் கருத்து கூறாமல் மவுனம் காத்த சரத்பவார் குறித்து பேசிய மராட்டிய மாநில பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே, தாவூத் இப்ராஹிமுக்கும் சரத் பவாருக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பது போல தெரிகிறது. இதன் காரணமாக தான் சரத் பவார் இன்னும் நவாப் மாலிக்கை பதவி விலக சொல்லாமல் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக, தேசியவாத காங்கிரசின் சூரஜ் சவான் புகார் அளித்ததன் பேரில் மும்பை ஆசாத் மைதான காவல் நிலையத்தில், மத்திய மந்திரி நாராயண் ரானேவின் மகன்களான பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே மற்றும் நிலேஷ் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நித்தேஷ் ரானே, தாவூத் இப்ராஹிம் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், சரத் பவாரும் மராட்டிய மாநில அரசும் தங்கள் அறைகளிலிருந்து காந்திஜியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு தாவூத் இப்ராஹிம் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கோபமாக கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com