

ஸ்ரீஹரிகோட்டா,
ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகும். முழுவதும் கார்பன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட, 7 மாடிகள் கொண்ட, பல நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாகும்.
'ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் பயண ஏவுதல் திட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) நண்பகல் 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இருந்தது.
ராக்கெட் ஏவ 4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்த நிலையில், கவுன்டவுண் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது காலதாமதமானது. இதனை தொடர்ந்து, கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நண்பகல் 12.06 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், புவி ஈர்ப்பு விசையை கடந்து, திட்டமிட்டபடி தனது இலக்கு நோக்கி பயணம் செய்தது. தொடர்ந்து, பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ. உயரமுள்ள சுற்றுப்பாதையில் பல ஆய்வு கருவிகளை (பேலோடுகளை) வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இந்த ராக்கெட்டானது 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஏவப்பட்டதன் மூலம் தனியார் விண்வெளித் துறை ஒரு திருப்புமுனையான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்திய மண்ணிலிருந்து ஒரு இந்திய தனியார் நிறுவனம் விண்கலங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் முயற்சி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.