சுதந்திரத்திற்கு பின் மிசோரமில் முதல் ரெயில் நிலையம்; 13-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மிசோரம் மாநிலம் பைராபியில் இருந்து சாய்ராங் வரை ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வால்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் இருக்கும் மாநிலம் மிசோரம். இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 சதவீதம் காடுகள்தான். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரெயில் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை.
மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரெயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்வழித்தடத்தின் ரெயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் என்ற போதிலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி உள்ளது. மிக குறைந்த தூரம் மட்டுமே மிசோரம் மாநில எல்லையில் இருந்தது. இந்தியாவில் ‘குறைவான ரெயில்பாதை கொண்ட மாநிலம் மிசோரம்' என்ற பெயரும் இருந்தது.
அதைப்போக்கும் வகையில், மிசோரத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைத்து மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரெயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர 1999-ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி எப்படியாவது நடைமுறைக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரெயில்வே அமைச்சகம் மேற்கொண்டது.
இதன் காரணமாக இத்திட்டத்துக்கான 51.38 கிலோமீட்டர் தூர ரெயில் பாதையில், 5 ரெயில்நிலையங்கள், 12.48 கிலோமீட்டர் நீளமுள்ள மலைகளை குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரெயில்நிலையம் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.8,071 கோடி செலவில் இந்த ரெயில் பாதையை ரெயில்வேத்துறை நேர்த்தியாக வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது. இந்தப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த ரெயில் நிலையத்தை வரும் 13-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.






