நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு; மற்றொருவர் மாயம்

குந்தாப்புராவில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் மாயமானார். 6 மீனவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு; மற்றொருவர் மாயம்
Published on

மங்களூரு:

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா உப்புந்தா அருகே கார்கிகாலி பகுதியை சேர்ந்த சச்சின் கர்வி (வயது 25) என்பவர் தனது விசைப்படகில் மீன்பிடிக்க உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் பட்கல் துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலுக்கு சென்றார். அவருடன் அதேப்பகுதியை சேர்ந்த நாகேந்திர கர்வி(29), நாகேஷ் கர்வி (24), தேவேந்திர கர்வி (25), அனப்பா கர்வி (45), ஆதர்ஷ் கர்வி (20), நாகேஷ் (30), சதீஸ் (34) ஆகியோரும் சென்றனர்.

அப்போது அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று ராட்சத அலை ஏற்பட்டது. இதில் சிக்கி படகு நடுக்கடலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் 8 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர்.

இதையடுத்து அவர்கள் 8 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு சென்றனர். அவர்களில் நாகேஷ், சதீஸ் தவிர மற்ற 6 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். நாகேஷ் நீச்சல் அடிக்கும் போது உடல் சோர்வு ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சதீஷ் மாயமானார்.

இதையடுத்து கரைக்கு நீச்சல் அடித்து வந்த மீனவர்கள், இதுபற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து வந்து, உயிரிழந்த நாகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நீச்சல் அடித்து வந்த மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடலில் மாயமான சதீசை கடலோர காவல் படையினர் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது நீச்சல் அடித்து சென்று வேறு பகுதியில் கரை ஒதுங்கினாரா என்பது தெரியவில்ல. அவரை கடலோர காவல் படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து குந்தாப்புரா புறநகர் பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com