

திருவனந்தபுரம்,
முல்லை பெரியாறு அணையில் மத்திய அரசின் ஐவர் குழு இன்று ஆய்வுப் பணிகளை தொடங்கினர்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை.
முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பு அளித்தது.
அணை குறித்து மத்திய நீர் வளக் குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையில், மத்திய அரசின் ஐவர் கொண்ட அணை மதிப்பீட்டு பொறியாளர்கள் குழு இன்று முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் அணை பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தேசிய நீர் மின் கழக முன்னாள் இயக்குநர் கோபால் தவான் தலைமையிலான இக்குழுவில் மூத்த பொறியாளர்கள், ஐஐடி பேராசிரியர் உள்ளிட்ட நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பிரதான அணை, பேபி அணை, மதகுகள், நில நடுக்கம் பதிவு செய்யும் சீஸ்மோகிராபி ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்வதுடன், புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதே நேரத்தில், அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடத்துவதற்கு தமிழகத்திற்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், பாதுகாப்பு ஆய்வு என்ற பெயரில் தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆய்வு, முல்லைப் பெரியாறு அணையின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.