மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
Published on

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இம்பால் கிழக்கில் உள்ள ஹட்டா கோலாபதி பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தின் உறுப்பினர் வைகோம் இபுங்கோ மெய்ட்டே என்பவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இம்பால் மேற்கு மற்றும் காக்சிங் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் மற்றும் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com