அகமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல இருந்த மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மாலை 4.05 மணியளவில் அகமதாபாத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் மிகுந்த கவனத்துடன் பின்பற்றப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com