

போபால்,
இந்தூரில் பெய்த கனமழையால் திருமண மண்டபத்தை வெள்ளம் சூழ்ந்திருந்ததால் மணமகன் மணமகளை தூக்கிச் சென்று மண்டபத்திற்குள் நுழைந்தார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் கேட் ரோடு பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைபவ் மற்றும் பூர்வா ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் திருமண சடங்குகள் தொடங்க இருந்த நேரத்தில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மண்டபத்தின் தரைப்பகுதி முழுவதும் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் மழைநீர் தேங்கி, குளம் போல காட்சியளித்தது.
மணமகள் பூர்வா கனமான திருமண ஆடை மற்றும் நகைகளை அணிந்திருந்தார். இதனால் அந்த வெள்ள நீரில் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார். இதைக் கண்ட மணமகன் வைபவ், சற்றும் யோசிக்காமல் தனது மணமகளை அப்படியே கைகளால் தூக்கிக்கொண்டார். மேலும், தேங்கி நின்ற மழைநீருக்குள் கவனமாக நடந்து சென்று அவரை பத்திரமாக திருமண மேடையில் இறக்கிவிட்டார்.
இந்த அழகிய தருணத்தைப் பார்த்து சுற்றியிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களது மொபைல் போன்களிலும் பதிவு செய்தனர். இயற்கை சீற்றத்தால் திருமணத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், மணமக்கள் இருவரும் சற்றும் மனம் தளராமல் மழையிலும், தண்ணீருக்கு மத்தியிலும் தங்களது திருமண சடங்குகளை அதாவது ஏழு சுற்றுகள் சுற்றி மகிழ்ச்சியோடு நடத்தி முடித்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்து வருவதோடு பரவலாகப் பகிரப்பட்டும் வருகிறது.