

மும்பை,
மராட்டிய மாநிலம் அஞ்சனி ஆற்றில் திடிரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மரத்தின் மீது ஏறி ஒரு நபர் உயிர் தப்பினார்.
மராட்டிய மாநிலம் ஜல்கான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. அதன் காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. அப்போது ஆற்றின் அருகே இருந்த சுரேஷ் பில் என்ற நபர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து சமயோசித புத்தியால் உடனடியாக செயல்பட்ட அவர், ஆற்றின் நடுவே இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி அமர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்.
கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் ஆற்றில் நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மீட்புக் குழுவினரால் உடனடியாக அவரை நெருங்க முடியவில்லை. பின்னர் சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு சுரேஷ் பில் பத்திரமாக மீட்கப்படார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆபத்தான முறையில் ஆறுகளைக் கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.