

புதுடெல்லி,
பீகாரில் 1990-களில் முதல்வராக பதவி வகித்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் மாட்டுத்தீவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளில் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு மருத்துவ சிகிச்சை பெற வசதியாக ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மே 11ல் அவருக்கு 6 வாரம், அதாவது ஆகஸ்ட் 14 வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ஜாமீன் நீட்டிப்பு கோரி லாலு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை கடந்த 10ம் தேதி விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 20 வரை ஜாமீனை நீடித்தது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் நீட்டிப்பு கோரிய லாலுவின் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அப்ரேஷ் குமார் வரும் 27 வரை ஜாமீனை நீடித்து உத்தரவிட்டார்.
தனது உடல் நிலை காரணத்தை காட்டி, தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால், லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை நிராகரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.