

புதுச்சேரி,
தமிழக அரசு சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்கியிருந்தது. அதேபோல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைப் பூர்த்தி செய்யும் வகையில், முதல்-மந்திரி ரங்கசாமி கவர்னருக்கு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் செலுத்தப்படும். எந்தத் தடங்கலும் இன்றி, இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகப் பெண்கள் தங்கள் தேவைகளுக்காக இந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதாந்திர நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது. தற்போது தேர்தல் வரவுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்கள், அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் தொகையைச் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 ஆக ஒரே தவணையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 63,000 குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.