1 ரூபாய்க்கு உணவு திட்டம் ஒரு மாதம் நிறைவு; பா.ஜ.க. எம்.பி. காம்பீர் மகிழ்ச்சி

டெல்லியில் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் ஒரு மாதம் நிறைவடைந்து உள்ளது என பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
1 ரூபாய்க்கு உணவு திட்டம் ஒரு மாதம் நிறைவு; பா.ஜ.க. எம்.பி. காம்பீர் மகிழ்ச்சி
Published on

புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர். கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். காம்பீர் அரசியலில் நுழைந்த பின்னர் மக்கள் நல பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளார்.

அவர் சார்ந்த கிழக்கு டெல்லி தொகுதியின் காந்தி நகர் பகுதியில் ஏக் ஆஷா ஜன ரசோய் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு டிசம்பர் 24ந்தேதி தொடங்கினார். இதன்படி, கவுதம் காம்பீர் அறக்கட்டளையானது 1 ரூபாய்க்கு உணவு வழங்கும்.

இந்த சமூக நலப்பணி பற்றி காம்பீர் கூறும்பொழுது, உணவின்றி வெறும் வயிற்றுடன் ஒருவரும் உறங்க செல்ல கூடாது என நாங்கள் விரும்புகிறோம். அதனால், டெல்லியில் இதுபோன்று 5 அல்லது 6 சமையற்கூடங்களை விரைவில் திறக்க இருக்கிறோம் என்று கூறினார்.

சாதி, மதம், இனம் அல்லது நிதி வசதி பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுகாதார உணவு பெறுவதற்கு உரிமை உள்ளது என நான் எப்பொழுதும் நினைப்பவன். வீடின்றி, கைவிடப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தின்படி, ஒரு தட்டு உணவுக்கு ரூ.1 கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு மொத்தம் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். இரண்டாவது முறையாகவும் உணவு பெற்று கொள்ளலாம். உணவு தேவையானவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரம் நிறைந்த உணவு வழங்கப்படும் என காம்பீர் கூறினார்.

எனினும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள சூழலில், கேண்டீனில் ஒரு நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என கூறினார்.

இந்த ஒரு ரூபாயும் சமையற்கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பயன்படுத்தப்படும் என்றும் காம்பீர் கூறினார். சிறப்பு நாட்களில் இந்த உணவில் அரிசி, பருப்பு மற்றும் காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும் என்று காம்பீரின் உதவியாளர் கூறினார்.

இந்த நிலையில், ரூ.1க்கு உணவு வழங்கும் திட்டம் ஒரு மாதம் நிறைவடைந்து உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் இன்று கூறும்பொழுது, நாங்கள் ஒரு மாதம் நிறைவு செய்ய முடிந்தது என்பது அதிர்ஷ்டம் நிறைந்த தருணம்.

இந்த திட்டத்தின்படி நாளொன்றுக்கு 600 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 6 நாட்கள் உணவு வழங்கப்படும். ஒரு நாளைக்கு 400 பேர் என்ற கணக்கில் உணவு வழங்கும் மற்றொரு திட்டத்தினையும் நாங்கள் தொடங்கி வைக்க இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com