

குருவாயூர்,
கேரளம் மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடப்பது வழக்கம். கடந்த 8.9.2024-ந் தேதி 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஆவணி மாத முகூர்த்த நாளான நேற்று 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதிகாலை 4.10 மணி முதல் திருமணம் நிகழ்ச்சி தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடந்தது.
கோவில் பகுதியில் உள்ள 6 மண்டபங்களில் திருமண விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 4 மணி முதல் கூடுதல் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, திருமணம் நடைபெற்றது. முதல் 2 மணி நேரத்தில் 137 ஜோடிகளுக்கும், அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரமும் 60 ஜோடிகளுக்கும் குறையாமல் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இங்கு வந்த மணமக்கள் முதலில் மேப்பத்தூர் அரங்கின் அருகே தெற்கு நடை பகுதியில் உள்ள அலுவலகத்தில் டோக்கன் பெற்றனர். அதன் பின்னர் உள்ளே வரும்போது, ஒரு புகைப்பட கலைஞர், உறவினர்கள் உள்பட 24 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
குருவாயூர் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது என்று குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் கோபிநாதன் தெரிவித்தார்.