

புதுடெல்லி,
ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரி வர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அழுத்தமே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதற்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையே, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தனது அறிக்கையில், 'ருபே கிரெடிட் கார்டுகளுக்கு சமமாக அமெரிக்க கிரெடிட் கார்டுகளும் யு.பி.ஐ.யில் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை" என்று விமர்சித்தார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை துறை விளக்கம் அளித்து கூறியதாவது:-
கடந்த 15-ந்தேதி வெளியிடப்பட்ட இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகத்தின் சுற்றறிக்கை யு.பி.ஐ.யில் ருபே கிரெடிட் கார்டுகளைத் தவிர வேறு எந்த கிரெடிட் கார்டுகளையும் கடன் சார்ந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அனுமதிக்கவில்லை.
இந்தியாவில் யு.பி.ஐ.யில் கடன் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ருபே கிரெடிட் கார்டுதான், பயனர்களின் விருப்பத்தேர்வாக அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது தெளிவான கொள்கை. மேலும், வெளிநாட்டு அழுத்தத்தால் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.