இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து சீன வெளியுறவுத்துறை சார்பாக நேற்று வெளியான அறிவிப்பில், இந்திய ராணுவம் இரண்டு முறை எல்லை தாண்டி அத்துமீறியதாகவும், இதன் காரணமாகவே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்தது. மேலும் சீனா எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுடனான தனது உடன்படிக்கையை மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்காது என்று சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ள ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து எல்லையில் நடந்த போதல் தொடர்பாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது லடாக் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாகவும், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்தும் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com