

ஐதராபாத்
ஐதராபாத்தில், காதலனுடன் ஒன்றாக தங்கிய வெளிநாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது காதலனை சந்திப்பதற்காக ஐதராபாத்துக்கு வந்துள்ளார்.
அவர் தனது காதலனுடன் ஒன்றாக வீட்டில் தங்கியிருந்தார். அதே வீட்டில் காதலனின் நண்பரான, பீகாரை சேர்ந்த ஆதித்யா ஆனந்த் என்ற மற்றொரு வாலிபரும் தங்கியிருந்துள்ளார். மென்பொருள் பொறியாளரான ஆனந்த், காதலன் வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அனுமதியின்றி தொட்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
வீட்டில் தனியாக இருந்தபோது அந்த இளம்பெண்ணை, ஆனந்த் தொடர்ந்து நெருங்கியும், தகாத இடங்களில் தொட்டும், சீண்டியும் வந்துள்ளார். கடந்த மார்ச் 17-ந்தேதி சமையலறையில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஆனந்த், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். அந்த நேரத்தில் இளம்பெண்ணின் காதலன் உள்ளே நுழைந்ததும், ஆனந்த் அமைதியானார்.
வாலிபரின் செய்கைகளால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இந்தியாவிலிருந்து நெதர்லாந்து நாட்டுக்கு திரும்பி சென்றார். பின்னர் அந்நாட்டிலுள்ள தூதரகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 22-ந்தேதி இந்தியா வந்தடைந்த அவர், கச்சிபவுலி போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகாரளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆதித்யா ஆனந்த் மீது, போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த ஆனந்த், மொபைல் போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். காதலனுடன் ஒன்றாக தங்கிய வெளிநாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.