ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை: 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது

ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை: 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது
Published on

பாரிபடா,

ஒடிசா மாநிலம் கியான்ஜர் மாவட்டம் மனோகர்பூர் கிராமத்தில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் என்பவர் தங்கியிருந்து கிறிஸ்தவ அறக்கட்டளை மூலம் தொழுநோயாளிகளுக்கு சேவை புரிந்துவந்தார். 1999-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி அவர் தனது பெரிய காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் தீவைத்ததில் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது மகன்கள் பிலிப் (வயது 10), டிமோதி (7) ஆகிய 3 பேரும் உடல்கருகி இறந்தனர்.

இந்த கொலை வழக்கில் சி.பி.ஐ. 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் முக்கிய குற்றவாளி தாராசிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. ஒடிசா ஐகோர்ட்டு தாராசிங் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், 11 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தாராசிங்கின் கூட்டாளி புதாடெப் நாயக் (45) என்பவர் தலைமறைவாக இருந்தார். 20 வருடங்களுக்கு பிறகு நேற்று அவரை சி.பி.ஐ. கைது செய்தது.

ஸ்டெய்ன்ஸ் மனைவி கிளாடிசுக்கு அவரது சேவைக்காக மத்திய அரசு 2005-ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com