

அமராவதி,
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்-மந்திரியாக பணியாற்றிய என்.பாஸ்கர ராவ், தனது 90வது வயதில் காலமானார். வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
ஆந்திரப்பிரதேச அரசியலில் என்.பாஸ்கர ராவ் பற்றி ஒரு பெரிய வரலாறு உண்டு. தெலுங்கு தேசம் கட்சியின் உருவாக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி. ராமராவுக்கு நெருங்கிய துணையாக இருந்து, கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான என்.பாஸ்கர ராவ், 1984-ல் ஒரு மாதம் மட்டுமே முதல்-மந்திரியாக பணியாற்றினார். மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் (1984 ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 16) முதல்-மந்திரி பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். இவரது இறுதிச் சடங்கு, ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில் வியாழக்கிழமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.