

கவுகாத்தி,
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய் (வயது 82) கடந்த ஆகஸ்ட் 25ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த பிறகு, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 1ந்தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.
மெக்கானிக்கல் வெண்டிலேஷன் உதவியுடன் தருண் கோகாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் சிகிச்சை பலனின்றி உடல்நல குறைவால் கோகாய் இன்று காலமானார்.