நடிகை டிவிஷா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கைது

முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
நடிகை டிவிஷா
Published on

மாடல் அழகியாக இருந்து நடிகை ஆனவர் டிவிஷா ஷர்மா (வயது 33). மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கட்டாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு கடந்த 12-ந் தேதி, தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது பெற்றோர், புகுந்த வீட்டினர் வரதட்சணை கொடுமை செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டினர்.ஆனால், புகுந்த வீட்டினரோ, டிவிஷா போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமை ஆனவர் என்று கூறினர்.

சிபிஐ விசாரணை

வரதட்சணை கொடுமை புகாரின்பேரில், டிவிஷாவின் கணவரும், வக்கீலுமான சமர்த் சிங், மாமி யாரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவுப்படி, டிவிஷா உடல் 2-வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், டிவிஷாவின் கணவர் சமர்த் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேநேரம் டிவிஷாவின் மாமியாரான முன்னாள் நீதிபதி கிரி பாலா சிங், மாவட்ட கோர்ட்டில் கடந்த 15-ந்தேதி முன்ஜாமீன் பெற்றார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய் யப்பட்டது.

நீதிபதி கைது

இதை விசாரித்த நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் பாரபட்சமான விசாரணை நடப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இதை தானாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்து இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பேட்டி களை வெளியிடக்கூடாது எனவும், செய்திகளை வெளியிடும் போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் உள்ளூர் ஊடகங்களை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com