முன்னாள் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி
Published on

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருண் ஜெட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை. அவர் அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உடல்நிலை சிக்கல் காரணமாக அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் கிட்னி, சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக எய்ம்ஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், இன்று காலை அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் குழு அருண் ஜெட்லியின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் எய்ம்ஸ்-க்கு நேரில் வருகை தந்துள்ளனர்.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com