

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வலதுகையாக திகழ்ந்தவர் முகுல் ராய் (வயது 71). ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவர் முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டவர். முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவரான ராய், கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவருக்கு ஞாபக மறதி நோயும் இருந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
இதனை அவருடைய மகன் சுப்ரான்ஷு ராய் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய மந்திரி முகுல் ராயின் மறைவால் வேதனை அடைந்தேன்.
அவருடைய அரசியல் அனுபவம் மற்றும் சமூக சேவை முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.