நடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்புலன்ஸ் - 4 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் நடந்து சென்றவர் மீது மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சியோனி,

மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோனி மாவட்டத்தில் நடந்து சென்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக உடல்நலம் சரியில்லாத அனிஷ் ஷா (18 வயது) என்பவரை ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து அவரது சொந்த ஊரான பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனுக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அழைத்துச் சென்று கொண்டிருந்தது. அதில் அனிஷ் ஷாவின் உறவினர்கள் 6 பேர் மற்றும் இரண்டு டிரைவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் இன்று காலை சியோனி மாவட்டத்தில், ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த பகுதியில் நடந்து சென்ற ரங்க்லால் குலாஸ்தே என்பவர் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த கம்பத்தில் இடித்து கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்சில் பயணம் செய்த பிரதிமா ஷா (35 வயது), பிரின்ஸ் ஷா (4 வயது), முகேஷ் ஷா (36 வயது), சுனில் ஷா (40 வயது) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரங்க்லால் குலாஸ்தே உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com