பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; 7 மாணவர்கள் பலி

பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; 7 மாணவர்கள் பலி

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவ, மாணவியர் வழக்கம்போல் பாடம் படித்துக்கொண்டிருந்தனர்.

காலை 8.45 மணியளவில் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பள்ளி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், கிராம மக்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவ-மாணவியர், ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Dailythanthi
www.dailythanthi.com