

புதுடெல்லி,
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சைபர் கிரைம் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவரக்ள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பாமர மக்கள் இந்த மோசடி கும்பல்களின் வலையில் விழுந்து தங்கள் பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், மோசடிக்காரர்கள் தற்போது ஒரு புதுவித மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பேசுவது போன்ற போலி வீடியோக்களை தயார் செய்கின்றனர். உதாரணமாக, 22 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று மத்திய மந்திரிகள் பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.
இதனை நம்பி சிலர் முதலீடு செய்வதாக நினைத்து தங்கள் பணத்தையும் இழந்துள்ளனர். குறிப்பாக முதியவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து இந்த சைபர் கிரைம் மோசடி நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் மோசடிகளில் தமிழகத்திலும் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 2 வழக்குகளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இது போன்ற போலி ஏ.ஐ. வீடியோக்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அல்லது மத்திய மந்திரிகள் பேசுவது போன்ற வீடியோக்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், இது போன்ற மோசடிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.