

திருவனந்தபுரம்,
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF), சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது 'பிரியதர்ஷினி' என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதையடுத்து கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகை வழங்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது.
இதன்படி கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'பிரியதர்ஷினி' திட்டத்தை முதல்-மந்திரி சதீசன் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
7 வகையான சாதாரண பஸ்களில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அந்த பஸ்களை அடையாளம் காண அவற்றில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும். இதன்படி சாதாரண அரசு பஸ், நகர பஸ், நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்ட சாதாரண அரசு பஸ், சீர்நிலை சாதாரண அரசு பஸ், டவுன் டூ டவுன் பஸ், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மற்றும் கிராமவாண்டி சேவைகள் ஆகிய பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது