

ராஞ்சி,
நாடு முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இதற்காக தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி கொள்கை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில் சீரம் இந்தியா நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று சீரம் இந்தியா அறிவித்தது.
அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த தடுப்பூசியில் 50 சதவீதம், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் ஜேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.