

கேரளம்,
கேரளத்தில் சாதாரண அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பிரியதர்ஷினி திட்டத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-மந்திரி வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
எனவே, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பஸ்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க கோரியும் பாலக்காடு-கோபாலபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) இயக்காமல் பஸ் உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இந்த வழித்தடத்தில் தினமும் 10 நிமிட இடைவெளியில் 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால், தனியார் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் டீசல் நிரப்ப மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.