

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2 கோடி தங்கம் சிக்கியது. இதொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதும், அதனை சோதனை நடத்தி சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
4 பேரிடம் விசாரணை
இந்த நிலையில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், அவரது உடைமைகளை சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே அந்த விமானத்தில் வந்திறங்கிய 4 பேரின நடவடிக்கையில் சுங்கவரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தடுத்த நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களது உடைமைகளையும் தீவிர சோதனை நடத்தினர்.
3 கிலோ தங்கம் பறிமுதல்
அதில் அவர்கள் டிராலி பேக்கில் சுருள் கம்பிகள் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடத்தி வந்த 3 கிலோ 895 கிராம் தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதுதொடர்பாக 4 பேரையும் பிடித்து பஜ்பே போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களின் பெயர்கள், விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.